Sunday, February 22, 2009

தபு ஷங்கரின் ...இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் ..காதல் பிறந்து இருக்கிறது ..

ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ
என்று
நீ எப்போதாவது
நினைத்திருந்தால்
அந்த நினைப்புக்கு
இந்த நூல் சமர்ப்பணம் ...

_________________________________________



நீ வந்துவிடாதே
இந்த வேதனையை அனுபவிக்க விடு
இதுவும் சுகமாய்தான்
இருக்கிறது ...


_________________________________________


நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்


________________________________________


மழையில் நனைந்த குழந்தையினை
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை
மழையில் நனைந்த படியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லா சிறுவனைப் போல
கடற்கரையிலும் பூங்காக்கிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலிகளை பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
ஏன் காதல் ....


________________________________________




நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது


___________________________________________


சின்ன மீன்களை
பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி
ஏன் கண்களைத் தின்றுவிடும்
உன் கண்களே போற்றி



__________________________________________



பாம்பாட்டி
பெட்டியைத் திறந்ததும்
படம் எடுக்கும் பாம்பு மாதிரி
என்னை பார்த்தும்
படம் எடுக்கும்
உன் பேரழகே போற்றி



_____________________________________________




ஒரு முற்றுப்
புள்ளியையே
கவிதையாக்கிவிடும்
உன் நெற்றியே போற்றி...




_______________________________________________




உன்னை வரைவதற்க்கான
கேன்வாசை தேவதைகள்
செய்துகொண்டிருக்கிறார்கள்
தூரிகையை
அண்ணன்கள் உதிர்த்து
அன்னங்களே சேகரிக்கின்றன
ஆனால்
உனக்கான வண்ணம்தான்
கடவுளிடம் கூட இல்லை
அதை
நீயே கொடுத்தால்தான் உண்டு ...



________________________________________




எனக்கெல்லாம்
காதல் வருமா என்று
நினைத்துகொண்டிருந்தேன்
" உனக்குத்தானடா வரவேண்டும்
என்பதைப்போல
நீ கொடுத்துவிட்டுப் போய்விட்டாய்
காதலை "..




_________________________________________




உங்கள் வீட்டு முன்பிருக்கும்
சிமெண்ட் மேடையில்
மின்சாரம் போன இரவில் நீ
அமர்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம்
கோயிலுக்குள் இருக்கும் மீனாட்சி அம்மன்
காற்று வாங்குவதற்காக
வெளியே வந்து
கோபுரத்தின் மேல்
அமர்ந்திருப்பதை போலவே
தோன்றும் எனக்கு ...



_____________________________________________

Wednesday, January 28, 2009

செல்லெனப்படுவது......செல்வேந்திரன்

தினசரி டார்கெட்டினை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் கைலிக்கு மாறி டீ
குடிக்க கிளம்பிய போது நண்பர் கிருஷ்ணாவிடமிருந்து போன் வந்தது. எங்கே
இருக்கீங்கன்னு பதட்டமா விசாரிச்சவர் கொஞ்சம் கிளம்பி போத்தனூர் போலீஸ் ஸ்டேசன்
வரமுடியுமான்னு கேட்டதில் ஏதோ பெரிய பிரச்சனையென்று முடிவுக்கு வந்தேன். சரி
நேரில் பேசிக்கொள்ளலாம் என அவசரமாய் பைக்கை எடுத்துக்கொண்டு உடனே போத்தனூர்
கிளம்பினேன்.
உள்நாட்டு குழப்பமும், வறுமையும் உந்தி தள்ள இரண்டு தலைமுறைகளுக்கு முன்
நேபாளத்தை விட்டு புலம் பெயர்ந்து கோவையில் குடியேறியவர் கிருஷ்ணாவின் தந்தை.
பிழைக்க வந்த ஊரில் இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகளை பெற்ற சாதனையோடு
செத்து போய்விட்டார். என்றைக்காயினும் நாடு திரும்பி சொந்த ஊரில் வாழ்ந்தாக
வேண்டும் என்ற கனவில் மொத்தக் குடும்பத்தையும் இழுத்து சுமக்கிற கிருஷ்ணாவின்
அம்மா அரும்பாடு பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து ஆளுக்கொரு வேலையும் வாங்கி
கொடுத்திருக்கிறார். பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னும் நேபாளில்
குடியேறும் கனவில் இன்னும் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார் அந்த வயோதிகப்
பெண்மணி. மொத்த குடும்பமுமே உழைப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் போனது.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எவரோடும் உரத்து பேசியறியாத பிரஜைகள். ஒருவரது
சம்பளம் வாடகைக்கு, ஒருவரது சம்பளம் சாப்பாட்டிற்கு, ஒருவரது சம்பளம் நேபாளில்
சொந்தக்காரர்கள் உதவியோடு கட்டி வரும் வீட்டிற்கு இன்னொருவர் சம்பளம் ஓரே
பெண்ணின் திருமண செலவிற்கு என்று திட்டமிட்டு வாழ்ந்து வந்தனர்.

எப்போதாவது அரிதாக வீட்டிற்கு அழைத்து செல்வார் கிருஷ்ணா. நான்கு பேரும்
உழைத்து விட்டு வீடு திரும்பும் நேரம் அவர்கள் வீடே அமர்க்களப்படும். வயது,
உறவு வித்தியாசமின்றி காலை அவமானங்களையும், அடுத்த நாள் கவலைகளையும் அடியோடு
மறந்து அவர்கள் உற்சாகமாய் ஒருவருக்கொருவர் ஏதேனும் சொல்லி சிரித்தபடி வட்டமாய்
உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கையில் ஊரின் நிணைவு வந்து உறுத்த ஆரம்பிக்கும்.
புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரமாதமாக வாழ முடியும் என்பதற்கு உதாரணம் இவர்களென
நிணைத்துக்கொண்டு விடைபெறுவேன்.
கிட்டத்தட்ட நேபாளத்தில் வீடு கட்டும் பணிகள் முடிவடைந்து கோயம்புத்தூரை விட்டு
கிளம்பி விட நாளும் குறித்திருந்தார்கள். நேபாளத்தில் அவர்களது சமூகத்தை
சேர்ந்த ஒரு விவசாய இளைஞனுக்கு பெண்ணைக் கொடுத்து, மணமகனின் தங்கையையே
கிருஷ்ணாவின் அண்ணாவிற்கு திருமணம் செய்து கொள்வது என முடிவாகி இருந்தது.
நாங்கள் இத்தனை வருடம் பட்ட கஷ்டத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது. சொந்த
நாட்டில், சொந்த கிராமத்தில் அப்பா ஆசைபட்ட படியே எங்கள் குல தெய்வத்திற்கு
பூஜை கைங்கர்யங்கள் செய்து ஒரு நேபாளியாய் வாழப் போகிறோம் என என்னிடம் அடிக்கடி
சொல்வார் கிருஷ்ணா.
போத்தனூர் ஸ்டேஷன் வாசலிலேயே கலங்கிய கண்களோடு நின்று கொண்டிருந்தார் கிருஷ்ணா.
அவரை நெருங்கி 'என்னாச்சு கிருஷ்ணா... எதுனா ஆக்ஸிடெண்டா?! என்றேன். ஓவென
அலறியபடி முகத்திலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார் கிருஷ்ணா. அவரது அருமைத்
தங்கை அவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துவிட்டு
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து விட்டார் என்பதை அறிந்த நான் அதிர்ச்சியில்
உறைந்தேன். இதற்கு முன் நண்பர்களுள் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு பெண்ணை
காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளத்தான் என்னுடைய உதவியை
நாடி இருக்கிறார்கள். நண்பன் ஒரு பெண்ணை கூட்டி வரும்போது எடுக்கிற
நிலைப்பாடும், நண்பனின் தங்கை ஓடிப் போய் விட்ட பொழுதில் எடுக்கிற நிலைப்பாடும்
ஒன்றாக இருக்குமா என்ன?!
தமிழகத்தைவிட பல வருடம் பின் தங்கி இருக்கும் நேபாள கலாச்சரத்திலிருந்து
வந்தவர்களுக்கு இது நிச்சயம் ஜீரணிக்க முடியாத பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
எத்தனை இருந்தாலும் ஓர் நாள் இந்த ஊரை விட்டு போக போகிறவர்கள் நாம்.
எல்லாரிடமும் அளவாக வைத்துக்கொள்ளுங்கள் என சொல்லி சொல்லி வளர்த்த பிள்ளைகளுள்
ஒன்று கிடை திரும்பும் போது பிரிந்த அதிர்ச்சியில் அந்த எளிய பெண்மனிக்கு
மாரடைப்பு வந்து விட்டதாம். அவளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு
அருகிலிருந்து பார்ப்பதற்கும் ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருந்தான் மூத்த மகன்
என்பதை கிருஷ்ணா மூலம் அறிந்து கொண்டேன். ச்சே... என்ன பெண் இவள்.... யார்
குறித்தும் கவலை இல்லாமல் இப்படியொரு கல்யாணம் செய்து கொண்டாளே.... என
மனதிற்குள் கருவிக்கொண்டு காவல் நிலையத்திற்குள் புகுந்தேன். உள்ளே
கிருஷ்ணாவின் வீட்டருகே குடியிருக்கும் பெரியவர்கள் அந்த பெண்ணிடம் தாயின்
நிலையை சொல்லி வீடு திரும்ப சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். எனக்கு யார்
குறித்தும் அக்கறை இல்லை. வாழ்ந்தா இவரோடு இல்லைன்னா இங்கயே செத்துடுவேன் என
வாதாடிக்கொண்டிருந்தாள் அவள். இதுமாதிரியான தினசரிக் காட்சிகளைப் பார்த்து
பழுத்த அனுபவமுள்ள காவலர் ஒருவர் " என்ன சொன்னாலும் இப்ப மண்டையில ஏறாது? சனியன
தலை முழுகிட்டு கெளம்புங்கய்யா... சோத்துக்கு அலையும்போது தெரியும்" என
பெரியவர்களை விரட்டிக்கொண்டிருந்தார். அவரிடம் எனது அடையாள அட்டையை காண்பித்து
விட்டு அவளை நெருங்கினேன். என்னைக் கண்டதும் முதுகை காட்டி திரும்பிக்கொண்டாள்.
அப்போதுதான் அந்த இளைஞனைக் கவனித்தேன். இந்தக் கிளிக்கு கொஞ்சம் கூட
பொறுத்தமில்லாத பூனையாக அதுவும் கடுவன் பூனையாக காட்சியளித்தான் அவன் (ர்).
குறைந்தது 35 வயது இருக்கலாம். அவள் வேலை செய்யும் ஜவுளிக்கடையில் இவனும் வேலை
பார்க்கிறானாம். சேலை மடிப்பது தவிர வேறு சோலி பார்க்க தெரியாத பனாந்தரி என்பது
அவன் முகத்திலேயே தெரிந்தது.
அவளோடு பேசினால் அவமானத்தை தவிர வேறு எதுவும் மிஞ்சாது என்பது புரிந்தது.
இன்ஸ்பெக்டரிடம் பேசி அவனது முகவரியைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவன்
குடியிருக்கும் ஏரியாவில் இருக்கும் பத்திரிகை நண்பருக்கு போன் செய்து
விசாரித்தேன். 'அவனா... ஏற்கனவே ஒருத்தி கூட கல்யாணம் ஆகி, ஓரே வாரத்துல அந்த
பொண்ணு இவன்கூட இருக்க முடியாதுன்னு ஓடிப்போயிடுச்சே' என அடுத்த அதிர்ச்சியை
தந்தார். அடக்கடவுளே....!
நொந்து போயிருக்கும் கிருஷ்ணாவிற்கு இன்னுமொரு பேரதிர்ச்சியை கொடுக்க வேண்டாம்
என முடிவு செய்து அவருக்கு டீ வாங்கி கொடுத்து கொஞ்சம் தேறுதல் வார்த்தைகளை
சொல்லி அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். வராந்தாவில் அவரது
அண்ணன் கதறியழுது கொண்டிருந்தான். நேபாளில் விடுவதற்காக உயிரைப் பிடித்து
வைத்திருந்த அந்த பெண் இறந்துவிட்டிருந்தாள். இரண்டு இளைஞர்களும் தங்கள்
நெஞ்சிலடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க கடவுள் குறித்த எனது நம்பிக்கைகள் நொறுங்க
ஆரம்பித்தன.
கிருஷ்ணாவின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் சொல்லி, மருத்துவமனைக்கு
செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி அவளது உடலை வீட்டிற்கு எடுத்து வருவதற்குள்
இரண்டு இளைஞர்களும் நான்கைந்து முறை மயக்கமடைந்தனர். அவளது தங்கைக்கு தகவல்
சொல்லலாம் என்ற போது இருவரும் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். உறவுக்காரர்களுக்கு
தந்தி கொடுக்க அட்ரஸை வாங்கி கொண்டு தந்தி அலுவலகம் செல்ல எத்தனிக்கையில் எனது
செல்ஃபோன் அழைத்தது. எடுத்து காதில் வைத்தேன் ' நான் கிருஷ்ணாவோட தங்கச்சி
பேசுறேன்.... என்னோட செல்ஃபோன் வீட்டுல இருக்கு.... அது நான் என் சம்பளத்துல
சம்பாதிச்சி வாங்குனது.... அதை நீங்களே பொது ஆளா எடுத்து எங்கிட்ட
கொடுத்துறுங்க.....

Friday, November 14, 2008

திரை விமர்சனம்

ஆசிப் மீரான் திரை விமர்சனம்




வாரணம் ஆயிரம் - நன்றி ஆயிரம்
சில ப்டங்களைப் பார்க்கும்போது சமயங்களில் ‘சே! போயும் போயும் இந்த நாவலை இப்படி படமா எடுத்து நாசம் பண்ணியிருக்காங்களே?!'ன்னு வருத்தம் வந்திருக்கும்.சில ப்டங்கள் நாவல் வாசிப்பது போன்ற இதத்ததைத் தருவதும் உண்டு. வாரணம் ஆயிரம் எந்த வகை?

படம் வெகு நீளம். சந்தேகமேயில்லை. அஞ்சலை பாடலுக்கு அவசியமேயில்லை. அதைப் போலவே சிகரெட் குடிக்காத இளைஞன் காதலியின் பிரிவால் வருத்தமிகுந்து போதைக்கு அடிமையாவதைக் காட்ட முயற்சிக்கும் நீண்ட காட்சிகள், காஷ்மீரில் தன்னிச்ச்சையாக சுற்றித் திரியும் காட்சிகள் என்று சில விசய்ங்களை வெட்டியிருந்தால்... படம் நீளம் குறைந்து இன்னமும் கச்சிதம் பெற்றிருக்கும். ஆனாலும்....

தகப்பனை தனது நாயகனாகக் கொள்ளும் மகனின் வர்ணனையாகக் காட்சிகளை விவரித்து கௌதம் சொல்லியிருக்கும் பட்ம வெகு அழகு. காதல் காட்சிகள் மிகைப்பட்டதாகத் தோன்றினாலும் சுவை குறைந்ததாக இல்லவே இல்லை - அதிலும் சமீரா ரெட்டியையும் வைத்துக் கொண்டு.

படத்தில் வாரணம் ஆயிரம் சூழ எழுந்து நிற்பவர் சூர்யா.
படம் முழுக்க ஆயிரம் அவதாரங்கள்.(எந்த அவதாரத்திற்காகவும் ஒப்பனை செலவு ஏதுமில்லை என்பது மிக முக்கியம்) ஒவ்வொரு சட்டத்திலும் ஒவ்வொரு தோற்றம். உடல் மொழியாலும், முக பாவனைகளாலும், மிகைய்ற்ற குரல் மொழியாலும் மிரட்டுகிறார்.
தமிழில் கமலைப் போல இன்னுமொரு அற்புதமான நடிகன் இருப்பதே பேருவகையாக இருக்கிறது. வாழ்த்துகள் சூர்யா!


(இந்த இடத்தில் வழக்கம்போல இளைய தளபதிகள், புரட்சி தளப்திகள், புண்ணாக்கு தளபதிகளையெல்லாம் உங்கள் இஷ்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்)

ஒரு நீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பென்று கருதுகிறேன்.

தந்தையிடம் காதலி பற்றி பேசுகிறான் மகன். தந்தை புன்முறுவலுடன் கேட்கிறார். ‘We made love daddy' என்று கதறும் மகன் தமிழ்ச் சூழலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்பவே புதுசு. பழையவைகளை மறந்து மீண்டும் காதல்வயப்படும்போது ‘சீக்கிரமே அவளிடம் காதலைச் சொல்லிடுடா! காக்க வைக்காதே!” என்கிறார் தந்தை. “டேய் நீ அப்பாவா? மாமாவா?” என்று அரங்கில் ஒரு குரல். சத்தியமாக இது அவர்களுக்கான படம் அல்ல.

தகப்பனை தியாகத்தின் உருவமாகவோ அல்லது புனிதப் பிம்பமாகவோ படைக்காமல் தனது நாயகனாகக் கருதும் மகனின் பார்வையில் விரிகிறது படம். தமிழ் சினிமாவில் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.

அப்படிப்பட்ட மகனாக இருப்பவர்களுக்கு இந்தப் படத்தோடு வெகுவாக ஒன்ற முடியும். என்னால் முடிந்தது படத்தின் பல்வேறு நிறை குறைகளுக்குமிடையில்..

கௌதம் மேனனைப் போல படமெடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும்...இந்த வாய்ப்பில் இதனைச் சொல்லிவிடலாம்.

நன்றி வாப்பா!!
இதற்கு மேல் நானென்ன சொல்வது?

Monday, October 13, 2008

ரசித்த கவிதை

குளங்கள்
பவுர்ணமி நிலவில்
ஒளிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கின்றன
எலிமெண்டரி ஸ்கூல்
சினேகிதனை
எதிர் கொள்ள
நேர்ந்த பருவப்பெண் போல


..................கலாப்ரியா




வாய் ஓயாமல் பேசும் பெண்கள்
வாயாடி என்றால் ….
நீ கண்ணாடி !!!



____________________________________________________________________




நேற்று பார்த்த
நீதானா நீ?
தினம் தினம்
அழகு கூடுதலில்
அடையாளமே
மாறிப் போகிறது!


- ப்ரியன்.


உனை ரசித்து ரசித்து
அழகு ரசித்து சலிக்க
ஆயுள் பல ஆகும்!
பேசாமல் உண்டுவிடு என்னை;
இரத்ததோடு ரத்தமாய்
உள்சுற்றி
அழகு ரசிக்கிறேன்!

- ப்ரியன்.

உன் கண்ணொளி
தீபத்தில்
சுடராக உயிர்வாழும்
என் உயிர்!
- ப்ரியன்.
உன்னுள்
இறங்கிவிட்டப் பிறகு!
நான்,
சுவாசமானால் என்ன?
உயிரேதான் ஆனால் என்ன?

- ப்ரியன்.

கடற்கரைப் பக்கம்
போய்விடாதே!
அலைகள் எல்லாம்
உன் கால் நனைக்கும்
ஆசையில் ஓடிவந்தால்
கடல் பொங்கி
மீண்டும் ஒரு
கடல்கோள் உண்டாகிவிடும்!

- ப்ரியன்.

தினம் தினம்
தொலைக்காட்சியில்
வானிலை வாசிக்கும் பெண்,
எனக்கு மட்டும் சொல்கிறாள்
உனைக் காணும் நாட்களெல்லாம்
மழைநாட்களாம் எனக்கு!







கடல்நீரை குடிநீராக்க
என்னென்னவோ செய்கிறது
அரசாங்கம்!
வா,உன் பங்குக்கு
கால் நனைத்துவிட்டுப் போ
அலையில்!






தொட்டால்
தட்டிவிடுகிறாய்!
தள்ளிச் சென்றால்
கை கோர்க்காமைக்கு
கோபிக்கிறாய்!
கடினம்தான்
உனை காதலிப்பதும்!






உன் தாயை சந்திக்கையில்
கேட்கவென பிரபஞ்சம் பற்றிய
ஒராயிரம் சந்தேகங்களைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்!
பின்னே,
நிலவைப் பிரசவித்தவளிடம்தானே
கேட்க வேண்டும்
பிரபஞ்ச இரகசியங்களை!







கண் மை வைக்கிறாய்
திருஷ்டி கழிகிறது
கண்களுக்கு







கோவில்,
எனை கண்டதும்
தலை குனிந்து
வெட்கத்துடன்
ஓடிப் போனாய்!
முறைத்துத் தொலைக்கிறான்
கடவுள்!








அழகு
உவமைகளை உனக்கு
உவமானம் ஆக்குதலைவிட
உவமைகளுக்கு உன்னை
உவமானம் ஆக்குதலே
தகும்!








உன்னைக் கண்டப் பிறகுதான்
அழகென்பது
உடலிருந்து
உள்ளத்துக்குத் தாவியது
எனக்கு







மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!







தென்றலின் சிநேகத்தோடு
தடவிச் செல்கிறது - உன்
தாவணி!
புயல் புரட்டியெடுத்த
பூமியாகிறது இருதயம்!







நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்







ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”

Tuesday, October 7, 2008

அருட்பெருங்கோ கவிதை

ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று
ஒதுக்கி விட்டால்?

காதலியைப் பற்றிய
கவிதை வேண்டுமாம்…
சிலையைப் பற்றியென்றால்
சில நொடியில் எழுதுவேன்…
ஓவியம் பற்றியென்றால்
ஒரு நொடி போதும்…
கவிதையைப் பற்றியே
கவிதை வேண்டுமென்றால் எப்படி?

சரி எழுதுவோம்
என்று உட்கார்ந்தால்
கவிதை வளர்கிறதோ இல்லையோ
உன் மேல் காதல் தான் வளர்கிறது!

உன் அழகைச் சொல்ல ஆரம்பித்தால்
பூக்களின் குறிப்பாகி விடுகிறது…
உன் குரலை வருணித்தால்
இசைக் குறிப்பாகி விடுகிறது…
பின் எப்படிதான்
உன்னைப் பற்றி கவிதை எழுதுவதாம்?

என்ன எழுதினாலும், உன்னுடைய

“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”

…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!

இன்னும் போராடி கவிதையாக,
ஒரு கவிதையெழுதினாலும்
அதை விட கவித்துவமாக நீயே இருக்கிறாய்!

பேசாமல் இந்தக் கவிதைப் போட்டிக்கு
நானனுப்பும் கவிதையாக நீயே போகிறாயா?

வேண்டாம்… வேண்டாம்…
நீ போனால் அப்புறம் அழகிப் போட்டியென்று
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்!

கவிதைப் போட்டியோ
அழகிப் போட்டியோ
நீ போனால் பரிசு நிச்சயம்…
கொஞ்சம் யோசித்து சொல்!

Monday, October 6, 2008

சேவியர் கவிதை

நான்
உன்னைச் சுற்றுகிறேன்
நீ
ஆண்டவனைச்
சுற்றுகிறாய்.

உன் தரிசனத்துக்காய்
நான்
ஆலய வாசலிலும்
ஆண்டவன்
உள்ளேயும் காத்திருக்கிறோம்.

இருக்குமிடத்திலிருந்தே
உனைத் தரிசிக்கும்
வரம்
ஆண்டவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது.



____________________________




நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும் சொல்லியிருக்கிறேன்.
இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு


__________________________




உனக்காய்
பூ பறிக்கையில்
விரலில் தைத்த முள்ளை
விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன்.
தீயை முத்தமிட்டு
சிதறிச் சிரிக்கும்
மத்தாப்பு போல
முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன



__________________________





காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையக் கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை
உன்னைச் சந்தித்தபின்



_____________________________




எத்தனை
விலையுயர்ந்த
வாழ்த்து அட்டை அனுப்பினாலும்
உன்
விரலெழுதிய வரிகளைத் தான்
திரும்பத் திரும்ம
வாசித்துச் சிலிர்க்கும்
மனம்.
ஏதும் எழுதாமல்
நீ அனுப்பும்
பகட்டு அட்டையை விட
நீ
ஏதேனும் கிறுக்கி அனுப்பும்
தபால் அட்டை
மிக அழகு.
அழகழகாய்
அடுக்கி வைத்து
நீ
அனுப்பும் பூங்கொத்தை விட
உன்
சீண்டல் பூக்கவைக்கும்
பூக்கள் கொள்ளை அழகு.
தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு.
சீக்கிரம் வந்து விடு
தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு.



___________________________






விஷயம் தெரியுமா உனக்கு ?
நீ
என் தோட்டப் பூவைத்தான்
தினசரி சூடுகிறாய்,
உன்
பூக்காரிக்கும் எனக்குமான நட்புக்கு
என்
காதலின் வயது.



______________________________






ஓரமாய் அமர்ந்து
நகம் வெட்டுகிறாய்.
விலகிக் கொஞ்சம்
விரல் வெட்டுவாயோ,
எனும்
என் பதட்டத்தின்
பல்லிடுக்கில்
உதட்டு இரத்தம் ஒட்டுகிறது.




__________________________




சிவந்த
உன் சிறிய உதடுகளில்
நீ
சாயம் பூசும் போது
உதட்டுச் சாயம் கொஞ்சம்
நிறம் திருடிக் கொள்கிறதே
கவனித்தாயா கண்மணி ?


_________________________





மெதுவாய்
சிவந்த இதழ்களை வருடி
உன் தோட்டத்து
ரோஜாவுக்கு
நீ
முத்தம் தரும் போதெல்லாம்
எது ரோஜா
என்று தெரியாமல்
தடுமாறி நிற்கிறது என் மனசு…




____________________________

Friday, October 3, 2008

சுஜாதா ரசித்த கவிதை

வரவேற்பாளர்



ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம்
உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.

தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன

போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு
ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.

கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே
பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.

எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.

பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.

விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.

அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு
மாலைப் பொழுதுகளிலும்.

சிரித்து வாழவேண்டும் என்று
கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட
கவலையாய் இருக்கிறது இப்போது.

மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண்வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய் !

சுஜாதாவின் வெண்பாவும் யூரின் தெரபியும்

அதிகாலையில் என்னைப் பார்க்க வந்திருந்தவர் கையில், கணையாழியின் கடைசிப் பக்கங்கள் நூல் இருந்தது. அதில், காது மடக்கின இடத்தைப் பிரித்து, ‘இது நீர் எழுதினதுதானா? என்றார். சற்று அதட்டலான குரல்.

அது ஒரு வெண்பா. எமெர்ஜென்சி யைத் தளர்த்தி, பொதுத் தேர்தல் நடத்தி, இந்திரா காந்தி தோற்று, மொரார்ஜி தேசாய் பிரதமராக வந்த காலத்தில், நான் எழுதிய வெண்பா.

யூரின் தெரப்பி… சிறுநீர் சிகிச்சை பற்றிப் பல செய்திகள் அப்போது வந்தன. தேசாயின் தேக ஆரோக் கியத்துக்கு முக்கியக் காரணம், அவர் தினம் காலையில் பருகும் இளமை ஊற்று என்று வேதங்கள் சொல்கிற வைக்கோல் நிற சொந்த திரவம்தான் என்று செய்திகள் வந்தன. இதைப் பல பேர் கேலி செய்தார்கள். எனக்கு இன்னும் சுதீர்தாரின் கார்ட்டூன் ஞாபகம் இருக்கிறது (பாத்ரூம் கதவு மூடியிருக்க, உள்ளேயிருந்து ‘சியர்ஸ்! பாட்டம்ஸ் அப்!!’ சப்தம்.). நான் அந்த தேசாய் தெரப்பி பற்றித்தான் ஒரு மெலிதான வெண்பா எழுதியிருந்தேன். அதைத்தான் அந்தப் பெரியவர் எனக்குச் சுட்டிக்காட்டினார். அவ் வெண்பா இஃது,

மிசா மறைந்து எமெர்ஜென்சி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்று எடுத்துக்கொண் டெல்லோரும்
_த்திரம் குடிக்கவா ரும்.

“நல்ல வெண்பாதானே? கொஞ்சம் அங்கங்க அட்ஜஸ்ட் பண்ணா, தளை தட்டாது!” என்றேன்.

“மண்ணாங்கட்டி! உமக்கு என்ன தெரியும், யூரின் தெரப்பி பற்றி?”

“அதிகம் தெரியாது சார்.”

“சொல்றேன், கேள்!” - ஆள்காட்டி விரலைக் காட்டி, “இதை நீ எளிதாக எண்ணக் கூடாது’’ என்று சரமாரியாக சரித்திரத்தை எடுத்துவிட்டார். ‘‘ரோமாபுரி சாம்ராஜ்யத்தில், மாமன்னர் கள் காலத்தில் இதன் விற்பனைக்கு வரி இருந்ததாம். வயிற்றில் அல்சர் போன்ற வியாதிகளுக்குச் சஞ்சீவியாகக் கருதப் பட்டது. குளிக்கும்போது ஒரு சொம்பு இதையும் மொண்டுகொள்வது உத்தமம் என்று ரோமர்கள் நம்பினார்களாம். சைனாவில் மூலிகை மருந்துகளை சிறுநீருடன் கலந்து கொடுப்பது தொன்றுதொட்ட வழக்கம். திறந்த புண்களுக்கும் அது தடவப்பட்டதாம். எகிப்திலும் குடித்தார்கள், தடவினார் கள், குளித்தார்கள். ஒரு பெண் கர்ப்ப மாக இருக்கிறாளா என்று கண்டுபிடிக்க பார்லி விதைகள் மேல் அவள் பெய்ய, அது முளைத்தால் கர்ப்பமாம்.ஜெர்மனி யில், பழங்காலத்தில் இளைஞனின் சிறுநீரை தேனில் கலந்து கொதிக்க வைத்து, கண்ணுக்கும் புண்ணுக்கும் தடவினார்களாம். இங்கிலாந்தில் ராத்திரி அதிகம் குடித்தால் (மூச்சா இல்லை, மது) அதிகாலை சிறுநீரை கையிலும் காலிலும் சூடாகத் தேய்த்துக் கொண்டால், ஸ்டெடியாகிவிடுவார் களாம். குங்குமப்பூ சேர்த்துக் கொப்பளிப்பது, தொண்டை கட்டிக் கொள்வதைத் தவிர்க்கும். பிரான்ஸில், அதிகாலையில் சிறுநீரைக் குடிப்பதால் கால் வீக்கம் குறையும் எனக் கண்டறிந்தனர். மஞ்சள்காமாலைக்கும் ‘அது’ நல்ல மருந்தாம்! இன்றும் பலர் ரகசியமாக தினம் அரை டம்ளர் குடிக்கிறோம்.” - இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார் பெரியவர்.

‘‘இப்படிப்பட்ட முக்கியமான சிகிச்சையை, 19&ம் நூற்றாண்டின் மருத்துவம் நான்சென்ஸ் என்று சொல்லிவிட, சிறுநீர் வைத்தியம் சிறுமைப்பட்டுப் பதவி இழந்தது. அண்மைக் காலத்தில் மாற்று சிகிச்சை முறைகளில் இதற்கு புத்துயிர் வந்திருக்கிறது” என்றார். தொடர்ந்து, “சிறுநீர் உண்மையில் கழிவுப் பொருளல்ல. அதில் விஷம் எதுவும் கிடையாது. 95 சதவிகிதம் தண்ணீர்தான். மற்றதில், இரண்டரை விழுக்காடு யூரியா. மிச்சம் என்ஸைம்கள், தாதுப் பொருள்கள், ஹார்மோன்கள் எனப் பலதும் உள்ளது, இதற்கு ஆன்ட்டிசெப்டிக் குணங்களும் உண்டு” என்று சொல்லிவிட்டு, “எனக்கு என்ன வயசிருக்கும், சொல்?” என்றார்.

“அறுபத்தைந்து?”

“எண்பத்தைந்து! எல்லாம் காபிக்கு முன் கால் தம்ளர் குடிப்பதால்தான்!”

“என்ன டேஸ்ட் இருக்கும்?”

“அது அவரவரைப் பொறுத்தது. பரிசோதித்துப் பாரேன். இதன் மகிமை புரிந்தால் சரி!” என்று சொல்லி விடைபெற்றார்.

நான் டாய்லெட்டுக்குச் சென்றேன். “தீர்மானித்துவிட்டேன். இனிமேல் இதைப் பற்றி வெண்பா எழுத மாட்டேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு, டாய்லெட்டின் சங்கிலியை இழுத்தேன்.

யூரின் தெரப்பியையும் ‘மங்கள் பாண்டே’யையும் துறந்துவிட்டு, கொஞ்சம் பிரபஞ்சத்தை வியக்கலாம். நாம் இருப்பது சூரியக் குடும்பம். “மில்க்கி வே” என்னும் பால்வீதி காலக்ஸியில், ஒரு ஓரத்தில் உள்ள நடுவாந்திர சைஸ் நட்சத்திரம் சூரியன்! சூரியனைச் சுற்றி பூமி, மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. சூரியன், பால்வீதியின் மையத்தை வைத்துச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வர, ஒரு வருஷம் ஆகிறது. சூரியன் பால்வீதியில் ஒரு ரவுண்டு வர, இருபத்திரண் டரைக் கோடி ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக் காலமாவதால், “மெல்லத்தானே சுற்றும்” என்று எண்ணாதீர்கள். ஆகாச கங்கை என்னும் பால்வீதியை ஒரு சுற்று முடிக்க எத்தனை மைல் போக வேண்டும், தெரியுமா? நூறாயிரம் ஒளி வருஷங்கள்! அதாவது 5865696 - க்கு அப்புறம் பன்னிரண்டு சைபர். அத்தனை மைல். எனவே, சூரியன் ஒரு செகண்டுக்கு135 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது. இது ஒரு காலக்ஸியின், ஒரு நட்சத்திரத்தின் சரித்திரம் மட்டுமே! இப்படிப் பல கோடிக்கணக்கான காலக்ஸிகள், பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்… இதெல்லாம் வேஸ்ட்டா? நாம் ஒருவர்தான் இந்த அண்ட பேரண்டத்தில் உயிருள்ளவர்களா? இதையெல்லாம் யோசித்தால், ராத்திரி தூக்கம் வராது!

வாழ்க வெண்பா வளர்க வெண்பாவின் புகழ்.


நன்றி - ஆனந்தவிகடன், சுஜாதா