Showing posts with label தபூ சங்கர் கவிதைகள். Show all posts
Showing posts with label தபூ சங்கர் கவிதைகள். Show all posts

Saturday, July 19, 2008

ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது. 

குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்... 

காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை! 

*********************************

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது! 

ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்... 

வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது
வானம்! 

*********************************

நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள். 

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன. 

ஆனால், 

நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்! 

முனிவர்கள் 
கடவுளைப் பார்ப்பதற்காகத் 
தவம் இருக்கிறார்கள். 
நானோ, 
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு 
தவம் இருக்கிறேன். 

*********************************

எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..? 

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்! 

*********************************

உன் கண்கள்
தானம் செய்ததுதான்
இந்தக் காதல்!
புத்தர் இந்த உலகத்தில் தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்
அமைத்துக் கொடுத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்துக் கொடுத்துவிட்டாய் 

*****************************

உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?
நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
அதைவிட
நீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு? 

***************************** 

என் மனதைக் கொத்தி கொத்தி
கூடு கட்டி
குடியும் ஏறிவிட்ட
மனங்கொத்திப் பறவை நீ 

*****************************

கடவுள் குடியிருக்கக் கோயிலாகக்கூட
இருந்துவிட முடியும்!
ஆனால்,
நீ குடியிருக்க வீடாக இருப்பது
முடியவே முடியாது என்பதை
நிரூபித்துக்கொண்டே இருக்கிறது |
நீ குடியிருக்கும்
என் இதயம்! 

***************************** 

நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன். 

*****************************

காதல்தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும். 

***************************** 

நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை. 

*****************************

என் தவத்தைவிடச்
சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்தத் தெய்வத்தாலும்
தந்துவிட முடியாது
நீ
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவதுதான்
எனக்குத்
திருவிளையாடல்.

******************

அற்புதமான காதலை
மட்டுமல்ல 
அதை உன்னிடம்
சொல்ல முடியாத 
அதி அற்புதமான
மௌனத்தையும் 
நீதான் எனக்குத்
தந்தாய். 

****************** 

அன்று 

நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு 
நின்றுவிட்ட 
மழையைப்
பார்த்தவனாகையால் 

இன்று 

சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே 
நினைத்துக் 
கொள்கிறேன்.
என்னை 
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ 

********************** 

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது

********************** 

நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக் 
கொண்டிருக்கும்.

********************** 

நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது 

********************** 

என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.

தபூ சங்கர் கவிதைகள்

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!