Sunday, September 28, 2008

செல்வேந்திரன் திரை விமர்சனம்

சேரன் அண்ட் ஹிஸ் ஓல்டு ஸ்பெக்ஸு

ஊரில் பிரபாகர் என்றொரு நண்பன் இருக்கிறான். இளமைக்காலத்தில் ஆண்டுக்கு தலா மூன்று காதல்கள் என்ற விகிதாச்சாரத்தில் காதலித்து வந்தான். மாறன் அம்புகள் மாறி மாறி அவன் மீது பொழிந்து வந்தாலும் விதி வித்தியாசமாய் விளையாடியது. பிரபாகர் யாரைக் காதலித்தாலும் அந்தப் பெண்ணிற்கு உடனே வேறு இடத்தில் திருமணம் ஆகிவிடும்.

பொத்தக்காலன்விளையில் "திருமண வரம் தரும் ஆரோக்கியமாதா ஆலயம்" இருக்கிறது. திருவிழா நாட்களில் கன்னிப்பெண்கள் பிரார்த்தனைக்கு உடனடி பலன் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்றொரு ஐதீகத்தால் மாதாக் கோவில் எங்கள் ஏரியா முழுக்க பிரபலம். அதனால் பிரபாகரனையும் நண்பர்கள் ஆரோக்கியமாதா என்று கேலி செய்வது வழக்கம்.

ராமன் தேடிய சீதை படத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். திருமணத்திற்கு பெண் தேடுகிறார் சேரன். தனக்கு பார்க்கும் முதல் பெண்ணிடம் தான் சிறுவயதில் கொஞ்சம் புத்தி பேதலித்து சிகிட்சை எடுத்துக்கொண்டதைக் கூற அவரை மணக்க மறுக்கிறார் அப்பெண். இரண்டாவது பெண் திருமணத்திற்கு முன்னிரவில் காதலித்தவனோடு உடன் போதல் செய்கிறாள். இதனால் மனம் தளர்ந்த சேரனுக்கு கண் பார்வையில்லாத ரேடியோ ஜாக்கி நெடுமாறன் (பசுபதி) மற்றும் அவரது மனைவி (கஜாலா) யின் நட்பு கிடைக்கிறது. நெடுமாறனின் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்களாலும், உதாரண வாழ்கை முறையிலும் வாழ்வின் மீதான நம்பிக்கை பிறக்கிறது சேரனுக்கு. மூன்றாவது பெண்ணைப் பார்க்கப்போன இடத்தில் தன்னை மணக்க மறுத்த முதல் பெண்ணையும், வறுமையின் பிடியில் இருக்கும் ஓடிப்போனப் பெண்ணையும் பார்க்கிறார். அவர்களுக்கு உதவுகிறார். மூன்றாவது பெண்ணின் மீதான காதலில் திருட்டுத் தொழிலை விட்டு விட்டு காதலிக்கும் உள்ளூர் ஆட்டோக்காரரின் கதையைக் கேட்டு அப்பெண்ணை அழைத்து புத்திமதி சொல்கிறார். நெடுமாறன் சொன்ன தகவலில் போலீஸ்காரரான நான்காவது பெண்ணைப் பார்க்கப்போன இடத்தில் போராட்டாக் காரரென தவறாகப் புரியப்பட்டு அப்பெண்ணின் கையாலே அடிபட்டுத் திரும்புகிறார். பின் முதலில் பார்த்த பெண்ணையே மணக்கிறார். இருங்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்கிறேன். வாசிக்கும்போது தலை சுற்றுகிறதென்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டுத் தொடருங்கள். எத்தா பெரிய எழுத்தாளனென்றால் கூட சுவாரஸ்யப்படுத்தி விடவே முடியாத கேவலத் திரைக்கதை. கூடிய மட்டும் குழப்பாமல் எழுதுவதற்குள் பக்கவாதமே வந்தது போல் இருக்கிறது.

மூன்று நிமிடங்களுக்கு ஒரு விளம்பர இடைவெளி விட்டு எடுத்திருந்தால் சுமார் ஓரு வருட காலம் வெற்றிகரமாக ஓட முடிகிற அருமையான சின்னத்திரை வஸ்துவை சினிமாவாக எடுத்து சீரழித்து விட்டார்கள். ஒரு கதைக்குள் உப கதை. உப கதைக்குள் உப உப கதை என ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் வைத்து படம் பார்க்க வந்தவர்களை படுத்தி எடுத்தார்கள். யதார்த்த நாயகன் சேரனைப் பார்க்கும் போது பரிதாபம் வருவதற்குப் பதிலாக எரிச்சலே மிஞ்சுகிறது. தனது இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களிடம் யதார்த்த நடிப்பை உறிஞ்சி எடுக்கும் அற்புத இயக்குனர், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்கிற ரீதியில் நிமிடத்திற்கு நிமிடம் கேட்கிறார். ஆட்டோ கிராஃபிற்கு வாங்கியக் கண்ணாடியைக் கழட்ட சாருக்கு இன்னும் மனசு வரலை. எனக்கு மட்டும்தான் எரிச்சலோ என நினைத்தால், சேரன் அடிவாங்கும் க்ளைமாக்ஸில் பக்கத்து சீட் மாமா "இன்னும் ரெண்டு அடி சேத்து போடும்மா...சனியன் என்னமா அறுத்தான்..." என்கிறார்.

"வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்சானாம்"னு நம்ம எம்.எஸ். பாஸ்கர் சொல்வாரே அதே மாதிரி மலச்சிக்கல்ல இருக்கும்போது கம்போஸ் பண்ண மாதிரி பாடல்கள். எழவு வீட்டை ஞாபகப்படுத்தற மாதிரி பின்னணி இசை. கண் பார்வையற்ற நெடுமாறனாகப் பிரமாதப் 'படுத்தி' எடுத்திருக்கிறார் பசுபதி. தன்னம்பிக்கை ஊட்டுகிறேன் பேர்வழி எனப் பக்கம் பக்கமாக டயலாக் பேசும்போது அவர் உண்மையிலே நெடு, நெடு மாறன். முடியல...

க்ளைமாக்ஸ் நெருங்குவதை ஊகித்து எனது தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த கேண்டியை எழுப்பினேன். விழித்தவள் சேரன் அடிவாங்கும் காட்சியில் அவரது கண்ணாடி உடைந்ததை "ஐய்யய்யோ... அந்தக் கண்ணாடி இல்லன்னா.... சேரனின் சினிமா வாழ்க்கையே முடிஞ்சுடுமே..." என உச்சுக் கொட்டினாள். நல்ல வேளை சேரன் இங்கிலீஷில் பேசும் காட்சிகளில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். ப்ளாக் போட்டா "சேரன் அண்ட் ஹிஸ் ஓல்டு ஸ்பெக்ஸுன்னு" தலைப்பு வைப்பா... ப்ளீஸ்..." என்ற அவளது கோரிக்கை இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சேரனுக்கும், ஜெகன்நாத்தும் தங்களது பலம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் இயங்க வேண்டிய களமே வேறு. கலைஞர் டிவியில் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

WEEK END WITH CANDY

வேறு எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால்தான் நானும் கேண்டியும் "பொய் சொல்லப் போறோம்" படத்திற்குச் சென்றோம். இயக்குனர் விஜய் தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் 'தல'வலி கொடுத்திருந்ததால் ரொம்பவே பயப்பட்டேன். ஆனால், இந்தப்படம் அவருக்கு பேர் சொல்லும் படைப்பாக மெல்லிய, துல்லிய படமாய் வந்திருக்கிறது.

நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை விழுங்கி ஏப்பம் விடும் ரியல் எஸ்டேட் முதலைகளை அவர்களது பாணியிலேயே பித்தலாட்டம் செய்து இழந்த பணத்தை மீட்கும் சாமான்யர்களின் கதை. துவக்கம் முதல் முடிவு வரை இயல்பை மீறாத, யதார்த்தமான படம். அதே சமயத்தில் ரம்பம் போடாமால், கதறி கண்ணீர் வடிக்காமல் இதமான நகைச்சுவையோடு கலந்து கொடுத்திருப்பதில் இயக்குனரின் திறன் வெளிப்படுகிறது. நிலத்தின் பெயரால் நிகழும் மோசடிகளில் ஒன்றிரண்டின் மர்ம மூடிச்சுகளை அவிழ்க்கிற முயற்சியாகவும், நிலம் வாங்கத் துடிக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும் "ஸ்டார் இமேஜ், கதறடிக்கும் சண்டைக்காட்சிகள், இல்லாத காரணத்தினால் இப்படம் ஓடாமல் போய்விடக் கூடாதே" என்ற பதற்றம் வந்து கொண்டே இருக்கிறது.

திரைப்படத்தின் ஓட்டத்தைத் தடுக்கும் முழு நீள பாடல்கள் இல்லை. மாறாக கதையை நகர்த்தும் சிறிய சிறிய ஜிங்கிள்ஸ் போன்ற பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். அன்றலர்ந்த மலர் போல அழகான ஹீரோயின். உருட்டு விழிகளும், துடிக்கும் உதடுகளும், சுருண்ட முடிகளோடும் யார் மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி முகம். நிறைய டிவி விளம்பரங்களில் பார்த்த ஞாபகம். ராம்நகரில் அவருக்கொரு ரசிகர் மன்றம் திறந்தாகி விட்டது.

பேபியாக வரும் நாசரைக் கண்டால் பயமாக இருக்கிறது. படத்தில் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக வரும் மெளலி நகைச்சுவை நடிப்பில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார். படத்தின் அத்தனைப் பாத்திரங்களும் இயல்பாக நடித்திருப்பதாலும், அருமையான திரைக்கதையாலும் விஜயிடமிருந்து நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்பட்டிருக்கிறது. படம் துவக்கம் முதல் முடியும் வரை கேண்டி யாதொரு கிண்டலும் செய்யாமல் அவ்வப்போது 'கடவுளே' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள். இதை விட வேறு என்ன வேண்டும் இந்தப் படத்தைப் புகழ?!

No comments: